வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது.
காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய
மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப்
பலன்கள்கொண்டவை. அனைவருமே
வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம்.
வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை,
இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும்.
வெந்தயக்கீரையைச்
சமைத்துச் சாப்பிட்டுவந்தால்,
மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும்
உடல் சூடு ஏற்படும். இதைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும்.
உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப்
போக்கும். வெளி வீக்கத்தின் மீது, வெந்தயக்கீரையை அரைத்துக் கிண்டி, வீக்கத்தின்
மீது வைத்துக்கட்ட, வீக்கம் குணமாகும். தீப்புண்கள்
மீது வைத்துக்கட்ட, காயம் விரைவில் ஆறும்.
வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால்,
மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும்
புண்கள் குணமாகும்.
இதன் இலையை எடுத்துச் சீமைப்புளி,
அத்திப்பழம், திராட்சையைச் சேர்த்துக் குடிநீர் செய்து
தேன் கலந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சு வலி, மூச்சடைப்பு குணமாகும்.
வெந்தயக்கீரையை நன்கு வேகவைத்து, சிறிது
வெண்ணெய் சேர்த்துக் கலக்கி உட்கொள்ள, பித்தம்
அதிகமாவதால் ஏற்படும் மயக்கம் குணமாகும்.
இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல
கிண்டி சாப்பிட்டுவந்தால்,
உடல் வலுவடையும். இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயக்கீரையுடன்
சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின்
மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில்
பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும்.
வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால்
வாய்ப்புண் ஆறும்.
வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.