
ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்
ஒரு நாள் அதிகாலை நேரம்
ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது
அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு
துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு
நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார்.
மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு
மறைந்து விட்டான்.
குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு
துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.
தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு
என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன்
துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.
ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு.
இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது.
இக்குளத்துக்கு பெண்கள்
குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால்
உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர
முடியாது என்று கூறி விட்டான்.என்னை
அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால்
தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.
தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என
அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின்
துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட
ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார்.
இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை
பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும்
உப்பரிகையிலிருந்து பார்த்து
விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார்.
அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு
உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று. உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த
தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்
ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால்
என் தோள் மீது தாங்கள் அமருங்கள்.
நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான்.
அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து
கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று
கொண்டிருக்கையில் காவலாட்கள்
அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர்
முன் நிற்பாட்டினார்கள்.
இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என
வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள்
மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே
தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே
செய்துள்ளோம் என்றனர். மன்னர் ராஜகுருவை அழைத்து
விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.
ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர
அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை
சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள்.
தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய்.
மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய்.
இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே
உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன்
என்றார் மன்னர்.
இதைக் கேட்ட தெனாலிராமன் தன்
உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.
காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது
அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும்
பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி
இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு
என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன்
என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.
காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில்
தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம்
என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை
உண்மை என்று நம்பினார்.
தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி
ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக
ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும்.
அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு
விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.
இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர்
கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச்
சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு
சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட
ராஜகுரு நடுநடுங்கினார்.
நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது
என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும்
அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.
அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள்
சகிதம் சுடுகாட்டிற்குச்
சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த
மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின்
ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு
தீங்கும் செய்யாதே..........
உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
மரத்திலிருந்து ஓர்
உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.
இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது
நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு
கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின்
ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய
பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி
நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும்
என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.
இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின்
ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும்
அந்தத்துறவியிடம் தெனாலிராமனின்
ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி
வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை
என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன்.
இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும்
தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான்
பிரம்மராட்சசனுடைய அட்டகாசம்
சுத்தமாக குறையும் என்றார்.
அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை
உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர்.
ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார்
துறவு.
மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை
உயிர்ப்பித்துக் காட்டுங்கள்.
அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே
துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார்.
நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன்
என்றார்.
இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக்
கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.
கூனனை ஏமாற்றிய கதை
ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன்
அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு
வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக
இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார்.
இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.
ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும்.
எனவே இக்குற்றத்திற்கு
மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி
கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக்
கூறினார்.
" கழுத்து
வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு
யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள்
தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர்.
வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக்
கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை
எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள்
என்று கூறியிருந்தார்.
இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும்
பேசாமல் நடந்தனர்.
ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச்
சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள்.
அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி
கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று
விட்டார்கள்.
தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக்
கொண்டிருந்தான். சற்று
தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. "அய்யா!" தெனாலிராமன் பெருங்
குரலெடுத்துக் கூவி
அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல்
கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன்
"பயப்படாதீர்கள். அருகில்
வாருங்கள்."என
அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த
துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே
அமர்ந்தான்.
"யாரையா
உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.
இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான்.
அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான்.
சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.
"அய்யா!
நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம்
ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால்
கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக
இருக்கிறது" என்றான்.
கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி
கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான்
தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும்
வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை
மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.
யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.