படித்ததில் பிடித்தது - நூல் ஏணி
ஆர். நீலா
பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல்
பரிசு பெற்ற சிறுகதை.
பொன்னுத்தாய்க்கு
ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.
"பாவிப்பய....
என்னமா நம்புற மாதிரி பேசுறான்...?'
இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே
பார்க்கிறான். கண்களில்
அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்!
அவள் ஒரு பொருட்டே இல்லை
என்பதுபோல் அவன் தொடர்கிறான்.... ""ஆமாப்பா.... அந்த மூர்த்தி ஒரு
பொம்பள பொறுக்கி.... அங்க என்ன பாடமா நடத்துறான்...? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே
இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...''
பொன்னுத்தாய்க்குக்
கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது.
""நேத்து பேஞ்ச மழயிலே மொளச்ச காளான்.... எப்படியெல்லாம் எடுத்துக்கட்டி பேசுறான்...? நான் மாலையும் கழுத்துமா இந்த வீட்டு வாசப்படி மிதிச்ச மக்கா
நாளே "அத்தாச்சி.... ஆய கழுவி விடு...'ன்னு வந்து நின்ன வாண்டு.... இன்னிக்கி வளந்துட்டானாம்....
என்ன வேணாலும் பேசுவானாம்... அவுக ஆயி அப்பன் அதக்கேட்டு பூரிச்சுப் போவாகளாம்.... நான்
கேனமாரி கேட்டுக்கிட்டு நிக்கணுமாம்... இருக்கறவுக இங்க இருந்தா இப்படியெல்லாம்
நடக்குமா?''
அவள் எண்ண ஓட்டம் புரிந்ததுபோல் மாமனாரின் குரல் வந்தது.
""அவன் என்ன சொல்லீட்டான்னு இப்ப நீலீக்கண்ணீர் வடிக்கிறே? அவன் சொன்னாலும் சொல்லாட்டியும்
நாஞ்சொல்றேன்.... இனிமேட்டுக்கு
நீ அங்க போகக்கூடாது.... மீறிப் போகணுமின்னா நடையக் கட்டிக்க.... நாங்களும் சொல்ற எடத்திலே சொல்லிக்கிறோம்....''
பிறவிக் குருடனுக்கு ஒருநாள் பார்வை
வந்து மறுநாளே பறிபோனது போல் துடித்துப் போனாள்.
"இங்கேருந்து
கூப்புடு தூரத்திலே இருக்கற எடத்துக்கு படிக்கப்
போனது இவ்வளவு பெரிய குத்தமா...?'
இரண்டு மாதங்களுக்கு முன்னால் மருதாயி
மதினி களையெடுக்கும் இடத்தில்தான் அதைச் சொன்னாள்.
"ஊரே
கொள்ளுன்னு கிடக்குடி... பொம்பளையெல்லாம் கூடிக் கூடிப் பேசிக்காளுக... போயி ரெண்டு நாளைக்கி ஒக்காந்தா போதுமாம்.... அம்புட்டு
படிப்பையும் படிச்சிரலாமாம்....
ஒரு மாத்தையிலே கடிதாசி கிடிதாசியெல்லாம் எழுதலாமாம்....''
பொன்னுத்தாய்க்கு
எழுத்து சுலபமாக வசப்பட்டது. சொல்ýக்கொடுக்க வந்த மூர்த்தியே அவளின்
அறிவுப்பசி பார்த்து அசந்து போனான்.
இரண்டு மூன்று எழுத்துகளை ஒன்று
சேர்க்கும்போது அது
ஒரு உருவம் பெற்றுவருவது புதுமையாகவும், விளையாட்டாகவும் இருந்தது. மளிகை மடித்து வந்த
காகிதங்களோடு அவள் மல்லுக்கு நின்றாள். சுவரொட்டிகளெல்லாம்
அவளோடு சொந்தம் கொண்டாடியது. மனசின் மர்மப் பிரதேசங்களில் எல்லாம் விளக்கெரிந்தது. சதா குத்தம் சொன்ன வீடுகூட அவளுக்கு இப்பொழுது சொர்க்கபுரியாகிவிட்டது.
சுவரில் கோடு போட்டு வைத்திருந்த பால்கணக்கை
நோட்டில் எழுத முயன்றாள்... வீட்டின் சுவரிலெல்லாம்
பொன்னுத்தாய்..... முத்துச்சாமி...
மயிலி... என்று கரிக்கட்டை எழுத்துகளால் கோணல்
மாணலாய் எழுதப்பட்டிருந்தது.
சதா உர்ரென்று ஒரு மாமனார்.... எதைச்
சொன்னாலும் குத்தம் சொல்லியே பழக்கப்பட்ட கொழுந்தன்...
இந்த வயசிலும் மாமனாரைப் பார்த்து பயப்படும்
மாமியார்.... எதையாவது "லவட்டிக்' கொண்டு போவதற்காகவே வரும் கட்டிக்கொடுத்த நாத்தனார்....
"மூணாப்பு'
படிக்கும் மகள் மயிலி இருந்தாளோ அவள்
பிழைத்தாளோ? எல்லோருடைய குற்றங்குறைகளும் பொன்னுத்தாய்க்கு
மறந்தே போனது.... பின்னே என்ன.... முன்னே
மாதிரி வீட்டு வேலையப் போட்டுப் போட்டு
பத்துப் பதினோரு மணி வரைக்கும் பாக்க
முடியுமா? எட்டு மணிக்கு வகுப்பு... அதற்குள்
எல்லா வேலையையும் முடிக்க வேணாமா?
பொன்னுத்தாய் ஓடி ஓடி வேலை செய்தாள். ஆறு மணிக்கெல்லாம் மாலைச் சமையல் முடிந்துவிடும்.
ஏழு மணிக்குள் கோழி கவுத்து மாடு
தண்ணி காட்டி வைக்கோல் போட்டு வீடுகூட்டி எட்டு மணிக்கெல்லாம் எல்லோருடைய
வயித்தையும் ரொப்பி.... முதல் ஆளாய்ப் போய்
உட்கார்ந்து விடுவாள். அவளுக்குப் பின்தான் ஒவ்வொருவராய்
"படிக்க' வருவார்கள்.
கணவன் முத்துச்சாமி வந்தால் கிடைக்கும்
வீட்டு அன்னியோன்யம் அவளுக்கு அந்த இடத்தில்தான் கிடைத்தது. அவன் வந்துவிட்டுப் போகும் ஓரிருமாதங்கள் பட்டாம்பூச்சியாய்த்
திரிவாள்.... அவன் மறுபடி கிளம்பிப் போய்விட்டால்
அடுத்து அவன் வரும்வரை அவன் வருகைக்கான தவம்....
அவன் சம்பாத்தியத்தில்தான் நாத்தனாரை நல்லாச் செஞ்சு கட்டிக்கொடுக்க முடிந்தது.... காடுகரைகளை வாங்க முடிந்தது..... மகள் மயிýக்கென்று ஓரிரண்டு நகை சேக்க முடிந்தது...
எங்கோ தூரதேசத்தில் தன் கணவன் உடம்பைக் கடம்பாய் அடித்து
வேலை செய்கையில் அவளுக்கு சிரிப்பு எங்கிருந்து
வரும்? திருமணமாகி ஆறாம் மாதமே அவன் பிழைப்புக்காக வெளிநாடு போய்விட்டான்.... அங்கு என்ன கலெக்டர் உத்யோகமா?
கப்பலில் சரக்கு ஏற்றும் சாதாரண கூலி.... வாயக்கட்டி வயித்தக்கட்டி தன்
குடும்பத்திற்காக உழைத்தான்....
நல்லவன்தான்....
கொஞ்சம் சங்கோஷி.... திருமணமான இந்த பத்து வருடங்களில் பொன்னுத்தாயிடம் எத்தனை வார்த்தை பேசியிருப்பான்
என்று எண்ணி விடலாம்.... வீட்டுக்கு எழுதும்
கடிதங்களிலும் எல்லோருக்கும்
போல பொன்னுத்தாய், மயிலி சுகமா? என்று ஒரேயொரு வார்த்தைதான்....
அவளுக்கோ அவனிடம் சொல்ல ஆயிரமாயிரம் சேதிகள் இருந்தது.
எல்லாவற்றையும் மானசீகமாக அவனோடு பேசிக் கொண்டிருப்பாள்... அவனிடம் நேரில் சொல்ல வேண்டுமென்று மனசு பரபரத்துக் கிடந்தது
மயிýயை "உண்டாகி' இருந்த பொழுதுதான்.... அப்பொழுதுதான் அவன் முதன்முறையாய் போயிருந்தான். அவன் கிளம்பும்போது மெய்யோ
பொய்யோவென்றிருந்தது. வயிற்றில் உதைக்கும் பிஞ்சுக்
கால்களின் குளுமை, ஆணா பெண்ணா என்ற செல்லச்சண்டை, பேரு வைப்பதில் போட்டி....
எல்லாவற்றையும் கணவனிடம் கற்பனையிலேயே பகிர்ந்து
கொண்டாள். அவன் நேரில் வரும்போது குழந்தைக்கு
வயது ரெண்டரை! அது மட்டுமா? தீபாவளிக்கு
வரிசை கொண்டு வந்த அண்ணனை மோதிரம் கொண்டுவரவில்லையென்று மானங்கண்ணியாய் பேசி அண்ணாவை கை
நனைக்காமலேயே அனுப்பிவிட்ட மாமனாரின் பவிசை புருஷனிடம் சொல்ல எப்படித் துடித்திருப்பாள்?
நல்ல வசதியான வீட்டில் வாக்கப்பட்டு
போனாலும் அப்பப்போ வந்து ஏதாவது சாக்குச் சொல்லி ஆயிரம், ரெண்டாயிரமுன்னு
புடுங்கற நாத்தனாரைப் பத்தி யாரிடம் சொல்ல?
அவளின் எல்லா ஏக்கங்களுக்கும் வடிகாலாய் அந்த அறிவொளி மையம்தான்
இருந்தது. தான் கற்றுக்கொண்டதை கணவனிடம் காண்பிக்க வேண்டுமே.... எடுத்தாள்
ஒரு காகிதம்.... தப்பும் தவறுமாய் எழுதினாள்
ஒரு கடிதம்..... என்ன ஆச்சரியம்!
அந்தக் கடிதமும் அவனுக்குப் போய்ச்
சேர்ந்து பதிலும் எழுதிவிட்டானே.... அது மட்டுமல்ல.... அவள் கடிதம் எழுதியதை ரொம்பவும்
சிலாகித்து எழுதியிருந்தான்...
பொன்னுத்தாய் கூத்தாடாத குறைதான்.... கடிதத்தில் ஆங்காங்கே
அவளின் ஆனந்தக்கண்ணீர் பட்டு எழுத்துகளே உருமாறி
இருந்தது.
கொழுந்தன் தன் சிம்மாசனமே பறிபோய்
விட்டதாய் சோர்ந்து போனான். இதுவரை வந்த கடிதமெல்லாம் அவன் பெயருக்குத்தான்
வரும்.... வந்தவுடன் உடனே படிக்கமாட்டான்.... கண்களாலேயே கெஞ்சும் அண்ணியின்
பார்வையை அலட்சியப்படுத்தி
மனசுக்குள்ளேயே படித்துவிட்டு
பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு
ஊர்சுத்தப் போய்விடுவான்....
அவனிடமிருந்து கடிதச்
செய்தியை கறப்பதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்றிருக்கும்...
அவர்கள் வாழ்க்கைச் சரித்திரத்தில் முதன்முறையாய் அவளுக்கு லெட்டர்!
இப்பொழுதும் அவள் எழுதியிருப்பாள் என்று அவன் நம்பவில்லை. யாரையோ எழுதச் சொல்லி அனுப்பி இருக்கிறாள் என்றுதான்
நம்பினான்.... அந்த
"யாரோ' அவள் போகும் தெருமுனைக் கூட்டத்தில்தான்
இருக்க வேண்டும் என்று நம்பினான்.
அவன் குறுக்கு மூளை உடனடியாக வேலை செய்தது... அங்கே
எல்லோருமே பெண்கள்..... அடுப்பு நோண்டிகள்... அரைகுறைகள்....
எல்லோருக்கும் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழி
என்று பேர் பண்ணிக் கொண்டிருக்கும் மூர்த்தி மட்டும்தான் கடிதம்
எழுதுமளவிற்குப் படிப்பாளி...
அவனுக்கும் ஊரையே தன் தோளில் தாங்குவது போல ஒரு நினைப்பு... அப்பா திடீரென்று செத்ததும் குடும்பத்தைக் காப்பாத்த
படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஒரு வீடியோ கடைக்கு வேலைக்குப் போனவன்....
பார்க்கும் நேரமெல்லாம் எதையாவது படித்துக்
கொண்டே இருப்பான்.... பேச்சில் கலெக்டர் கெட்டான்
போங்கள்... அவனைச் சுத்தி அவன் பேச்சையும் கேக்க ஒரு கூட்டம்.... சதா கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டே
இருக்கும்.... அவனோடு
பேசும்.... சிரிக்கும்.... சண்டை போடும்.... சிக்குத்தலையும்,
வியர்வை நாத்தமும், கிழிந்த ஆடைகளுமாய் அந்தப்
பரதேசிக் கூட்டத்திற்கு இவர்தான் ஏகபோக மகாராஜா!
அவனிடம் மாட்டிக் கொண்டால் போச்சு.....
சிகரெட் பிடிக்காதே.... தண்ணி அடிக்காதே.... ஒரே
அட்வைஸ் மழைதான். இவன் அரிச்சந்திரனா இருந்தா
எனக்கென்ன? அதுக்காக ஊரு பொம்பளைகளையெல்லாம் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழின்னு தூண்டி விடுறதா?
என்ன செய்யலாம்...? என்ன செய்யலாம்...?
தெருமுக்கில் வரும்போது மறைந்திருந்து ஒரு
கல்லை வீசினால் என்ன? ஒருவேளை மாட்டிக்
கொண்டால்...? மூர்த்தியின் ஆஜானுபாகுவான உடம்பு ஒரு கணம் மின்னி மறைந்தது. எப்படி எப்படியோ யோசித்தும்
ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஒரே வாரத்தில் அந்த சந்தர்ப்பம் வந்தது. அந்தக் கூட்டத்துக்குள்
ஒரு பொண்ணுக்கும் மூர்த்திக்கும் "இது'வாம்... அவனுக்குத் தோதாய்
அது வளர்ந்தது... கண், காது ஒட்டவைத்து கோள்மூட்ட ஒரு காரணம் கிடைத்துவிட்டது. "மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி....' எப்படியோ குறுக்குச்சால் ஓட்டி தன் காரியத்தை சாதித்து விட்டான்.
அவளை மையத்திற்குச் செல்லவிடாமல்தான்
தடுக்க முடிந்ததேயொழியே,
தன் பசிக்கு அவள் வீட்டுக்குள்ளேயே இரை தேடிக் கொண்டது அவனுக்குத் தெரியாது. மகள்
மயிலியின் பாடப்புத்தகங்கள்
பொன்னுத்தாயின் விரல்களால்
புனிதம் பெற்றது.
கணவனுக்கு மற்றொரு கடிதத்தையும் எழுதி
அனுப்பிவிட்டாள். இதற்கிடையில்
முத்துச்சாமி தெரிந்த இரு நண்பர்கள் மூலமாக
இரண்டு கைக்கடிகாரங்களை
அனுப்பியிருந்தான். ஒன்று
தம்பிக்காம்... இன்னொன்று
அவளுக்காம்....
ஆனந்தத்தில் அவள் திக்குமுக்காடிப் போனாள்! "பெரிய பெரிய டீச்சரம்மாக்களும், பெரிய வூட்டுப் பிள்ளைகளும்
போடுற அந்த தங்கக்கலர் கெடியாரம் எனக்கே
எனக்கா?'
கையில் மேலாக வைத்து அழகு பார்த்தாள். இருண்ட வானில் நிலவைப் போல அவளின் கறுத்த கையில் ஜொலித்தது! குழந்தையைப் போல குதூகýத்தாள். மயிýயை விட்டு பெட்டிக்கடையிலிருந்து கலர் வாங்கிவரச் சொன்னாள்.
அப்போதுதான் கறந்து வந்திருந்த பாலில் காபியும் போட்டாள்.
வந்திருந்தவர்கள்
எதைக் குடிப்பது என்று முழித்தாலும் அவளின்
உற்சாகம் அவர்களை புன்னகைக்க வைத்தது. புதிய
கடிகாரத்தை இயக்கும் விதம் பற்றி சொல்லிக் கொடுத்ததோடு கையில் கட்டவும் உதவி புரிந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டுத்தான்
போகவேண்டுமென்று எல்லோரும்
வற்புறுத்தியதில் மறுக்கத்
தோன்றாமல் இசைந்தார்கள். சாதம் வைக்கும்போதும் குழம்பு ஊற்றும் போதும்கூட
கெடிகாரத்தை அவள் கழற்றவேயில்லை.
சதா அவள் உதடுகளில் சிரிப்பு
தவழ்ந்து கொண்டே இருந்தது. தலையில் இடித்துக்
கொண்டதற்கு கூட சிரித்தாள். கொழுந்தன் குரோதம்
வழிய முறைத்தான். ஒரு வழியாக இருவரும் கிளம்பினார்கள். மாமனாருக்கும் மாமியாருக்கும் அவர்களைவிடவே மனசில்லை. அவளுக்கும்தான். வாசல்படியில் நின்று அவள் பிரியாவிடை கொடுத்தாள். அவர்கள்
நாலெட்டு நடக்கும்போது சட்டையை மாட்டிக்கொண்டே போன கொழுந்தன் சொன்னான்.
"எட்டு
மணிக்குத்தான் பஸ்....
நிதானமா நடக்கலாம்...''
""இப்ப மணி என்ன?'' ஒருவர் கேட்க இன்னொருவர் மணிக்கட்டைத் திருப்பித் திருப்பிப்
பார்த்தார்.
இருட்டில் தெரியவில்லை போலும்....
கொழுந்தன்காரனின்
குரல் வாசல்படியில் நிற்கும் பொன்னுத்தாயை நோக்கி
நக்கலும் குத்தலுமாய் வந்தது....
""அத்தாச்சி மணி என்ன?''
பொன்னுத்தாயி நடுங்கிப் போனாள்.
"நானா?
என்னையா மணி கேட்கிறான்...?'
பரிகாசமாய் சொல்வது போல் அவன் குரல் கலகலவென்று வந்தது.
""இது என்ன ஜிமிக்கி கொலுசுன்னு நினைப்பா போட்டு
அழகு பாக்க.... கெடிகாரமத்தாச்சி.... போட்டா மணி பாக்கத் தெரியணும்....''
பொன்னுத்தாயி அவனை உறுத்து விழித்தாள்.
அவன் விழிகளில் தெரிந்த நக்கல்.... நையாண்டி....
இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென்று குளம் கட்டும் கண்ணீர்
ஏனோ வரவில்லை. இறுகிய உதடுகளில் வன்மம்.
மணிக்கூண்டு கடிகாரம் அவளுள் படமாய் விரிந்தது. மணிக்கூண்டின் ஒவ்வொரு எண்ணும் அவளுடைய கைக்குள்
அடைக்கலமாகி கோடுகளாய் விரிந்தது.
மந்திரம் போல் அவள் வாய் அட்சர சுத்தமாய் சொன்னது.
"ஏழு
மணி.... முப்பது நிமிடம்.... அதான் ஏழரை மணி....''
சொல்லிவிட்டு சட்டென்று கொழுந்தனைப் பார்த்தாள்.
அவளின் கம்பீரத் தலைநிமிர்வில் அவன் தலை கவிழ்ந்தான்.
ஐந்தே வினாடிகளில் இழந்த சிரிப்பை அவள் உதடுகள் மீண்டும்
பெற்றது.
ஆர். நீலா
Quelle - பெண்ணே நீ